Monday 29 May 2017



தனிமனித உரிமையில் நாஸ்திகம் ?

உரிமைகள் என்பது நியாயத்தின் அடிப்படையில் ஒருவருக்கு மரபு ரீதியாக அனுமதிக்கப்படும் விஷயங்களைக் குறிக்கின்றன. தற்போதைய உலகில், மரபுகள் அனைத்தும் சட்டங்களாக மாற்றப்பட்டு வருவதால், சட்ட ரீதியாக அனுமதிக்கப்படுபவையும் உரிமைகளின் பிரிவில் அடங்குகின்றன. உதாரணமாக, தந்தையின் சொத்தினை அனுபவிப்பதற்கான உரிமை மகனுக்கு மரபு ரீதியாக வந்து கொண்டுள்ளது. நவீன காலத்தில், (இந்தியாவில்) 18 வயதை அடைந்தவர்கள் அனைவருக்கும் ஓட்டுரிமை என்பது சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் தத்தமது பணியினை சிறப்பாக ஆற்றுவதற்கும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் மற்றவர்களின் தொல்லையின்றி நடமாடுவதற்கும் இந்த உரிமைகள் உதவி செய்கின்றன.

உரிமைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் என்பதிலும் அந்த உரிமைகளைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமை என்பதிலும் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. ஆனால் இன்றைய உலகம் வரைமுறையற்ற உரிமைகளுக்காக போராடி வருகிறது. மனித சமுதாயம் தன்னுணர்வை அடிப்படையாகக் கொண்டு வாழ வேண்டும் என்றும் அத்தகு தர்மம் மனித சமுதாயத்தில் இல்லையெனில் அது மிருக சமுதாயத்திற்கு சமம் என்றும் யாம் பலமுறை அறிவுறுத்தியுள்ளோம்.

துரதிர்ஷ்டவசமாக, புலனின்பமே பிரதானம் என்று வாழும் இன்றைய நவீன சமுதாயம், உரிமைகள் என்ற பெயரில் எல்லாத் தரப்பட்ட புலனின்ப விஷயங்களையும் ஊக்குவிக்கின்றது. இதன் விளைவாக, ஒவ்வொரு நாட்டிலும் உரிமைகள் வேறுபடுகின்றன. அதாவது, ஒரு குறிப்பிட்ட நாட்டில் உரிமையாக கருதப்படும் ஒரு செயல், மற்றொரு நாட்டில் குற்றமாக கருதப்படுகின்றது. உதாரணமாக, ஓரினச் சேர்க்கை என்பது சில நாடுகளில் உரிமையாகவும் சில நாடுகளில் குற்றமாகவும் கருதப்படுகிறது. நிலைமை இவ்வாறு இருப்பதால், இந்த உரிமைகளை யார் நிர்ணயிப்பது என்பதை நாம் யோசித்தாக வேண்டும்.

மேலே யாம் விளக்கியபடி, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் குறிப்பிட்ட கடமைகளும் உரிமைகளும் உள்ளன. ஆனால் இன்றைய சமுதாயத்திலோ, தனிமனித உரிமை என்ற பெயரில் அந்த தனிமனிதன் தனக்குத் தானே தீமை தரக்கூடிய செயல்களைச் செய்கிறான். இன்றைய சமுதாயம் முழுவதும் அசுர சமுதாயமாக மாறியிருப்பதால், செய்யக்கூடியவை யாவை, செய்யக்கூடாதவை யாவை என்பதை அறியாமல் இருக்கின்றனர் (பகவத் கீதை 16.7). பாவ புண்ணியங்கள், நல்லது கெட்டது, மறுபிறவி, கர்ம வினைகள் போன்றவற்றைப் பற்றிய அறிவு இத்தகைய தனிமனித உரிமையின் பேச்சுகளால் மறைக்கப்படுகின்றது, மக்களும் சற்றும் அறிவற்ற மூடர்களாகவே வாழ்கின்றனர்.

முதல் உதாரணம், பசு மாமிசம் உண்ணுதல். மாமிசம் சாப்பிடுபவர்கள் நரகத்திற்குச் செல்வர் என்பதும் அதிலும் குறிப்பாக (தாயைப் போன்று மதிக்கத்தக்க விலங்கான) பசுவின் மாமிசத்தைச் சாப்பிடுபவர்கள் கொடிய நரகத்தில் நீண்ட காலம் வைக்கப்படுவர் என்பதும் சாஸ்திரங்கள் உரைக்கும் உண்மை. ஆனால் இந்த உண்மையை மறைத்து மக்களை நாஸ்திகத்தின் இருண்ட கிணற்றில் தள்ளுவதற்காக தனிமனித உரிமை வலியுறுத்தப்படுகிறது. “எனது தட்டில் எந்த உணவு இருக்க வேண்டும் என்பதை நானே தீர்மானிக்க வேண்டும்” என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது, ஆனால் இது நடைமுறைக்கு உதவாது. தனக்கு எது நல்லது எது கெட்டது என்பதை அறியாத ஒரு குழந்தை தனது தட்டில் “இது வேண்டும், அது வேண்டும்” என்று அடம் பிடிக்கலாம், ஆனால் குழந்தையின் நலனை விரும்பும் பெற்றோர்கள் சில உணவுகளைத் தடை செய்ய வேண்டியது அவசியம். அதுபோலவே அறியா குழந்தையைப் போன்ற மக்களின் தட்டுகளில் வைக்கப்படும் உணவினை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. பிரச்சனை என்னவெனில், சில வளர்ந்த முட்டாள்கள் தங்களுடைய குழந்தைத்தனத்தை “தனிமனித உரிமை” என்று நினைக்கின்றனர்.

இங்கே மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்: மனிதனின் உரிமையைப் பற்றி மட்டும் பேசுகின்றனர், அந்த மனிதனால் கொல்லப்படும் விலங்கிற்கு உரிமை ஏதும் இல்லையா? அந்த விலங்கிற்கு வாழ்வுரிமை கிடையாதா? என்னே விந்தை! உரிமை என்ற பெயரில் என்னே கபடத்தனம்! மாடுகளுடன் கூடிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்குத் தடை, ஆனால் அதே மாடுகளைக் கொலை செய்து சாப்பிடுவது தனிமனித உரிமை! என்னவென்று சொல்வது!

இரண்டாவது உதாரணம், குடிப்பழக்கம். “குடி குடியைக் கெடுக்கும்” என்று எழுதி வைக்கின்றனர், குடியின் கேடுகள் என்ன என்பதை திருவள்ளுவரும் கள்ளுண்ணாமை என்னும் அத்தியாயத்தில் கூறுகிறார் (இந்த அத்தியாயமும் ஊன் உண்ணாமை என்னும் அத்தியாயமும் இன்றைய பாடப் புத்தகங்களில் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன), சாஸ்திரங்களும் குடியின் விளைவுகளைப் பட்டியலிடுகின்றன. ஆனால் தங்களுடைய கஜானாவை நிரப்ப நினைக்கும் சில தொழிலதிபர்கள் மக்களைக் கெடுத்து சொத்து சேகரிப்பதில் ஆர்வமாக இருப்பதால், குடிப்பழக்கம் தனிமனித உரிமை என்றும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்காமல் குடியுங்கள் என்றும் விளம்பரம் செய்கின்றனர். மக்களும் மதிமயங்கி குடித்து குடித்து அறிவை இழக்கின்றனர்.

மூன்றாவது உதாரணம், நீலப் படங்களைப் பார்த்தல். பெரும்பாலான இளைஞர்களின் கையில் ஸ்மார்ட் போன் என்று அழைக்கப்படும் அலைபேசி கருவி உள்ளது. அதில் பார்க்கக்கூடாத படங்களைப் பலரும் பார்த்து சீரழிந்து வருகின்றனர். இதனைத் தடுப்பதற்கு ஏதேனும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அங்கே மீண்டும் தனிமனித உரிமை என்று குரல் கொடுக்கின்றனர். தகாத படங்களைப் பார்த்தல் தகாத பாலுறவிற்கு வழிவகுக்கின்றன என்பதும், தகாத உறவினால் சமுதாயம் சீரழியும் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள் (பார்க்க பகவத் கீதை அத்தியாயம் 1). ஆனால் நீலப் படங்களைத் தயாரிப்பதை தொழிலாகக் கொண்டவர்களும் அதை மற்றவர்கள் பார்ப்பதால் கோடிகளை அள்ளுபவர்களும், தனிமனித உரிமை என்று குரல் கொடுத்து அவற்றை அனைவரும் பார்ப்பதற்கு வழிவகுக்கின்றனர். நீலப் படங்களை அனுமதிக்கலாமா கூடாதா என்று பட்டிமன்றம் வைத்து வாதிடுகின்றனர், அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வாதிடுகின்றனர். ஆனால் இவர்களுடைய வாதங்கள் அனைத்தும் தனிமனித உரிமை என்பதைச் சார்ந்தே அமைகின்றன, யாரும் மனிதனின் உண்மையான நன்மையைக் கருத்தில் கொள்வதில்லை. வாதிடுபவர்களுக்கும் சரி, அந்த வாதங்களைக் கேட்பவர்களுக்கும் சரி–யாருக்குமே எந்தவோர் அடிப்படைக் கொள்கையோ தத்துவமோ கோட்பாடோ இல்லை என்பதுதான் வெட்கக்கேடு.

பசு மாமிசம் உண்ணுதல், மது அருந்துதல், நீலப் படங்களைப் பார்த்தல் ஆகிய மூன்றுமே தனிமனித உரிமை என்ற கோணத்தில் அணுகப்படுகின்றன–இவை மாபெரும் பாவங்கள் என்பதும் பாவத்தின் முக்கிய தூண்கள் என்பதும் மக்களுக்கு உரைக்கப்படுவதே இல்லை. இவ்வாறாக, இன்றைய நாஸ்திகர்களும் இடதுசாரி மனப்பான்மை கொண்டவர்களும், தனிமனித உரிமை என்பதை அதிகமாக வலியுறுத்துவதன் மூலமாக, பாவ புண்ணியம் குறித்த அச்சமற்ற வாழ்வை மனித சமுதாயத்தில் உருவாக்கி நாஸ்திகத்தை திணித்து வருகின்றனர்.

1 comment: