Saturday 27 May 2017

உடன்கட்டை ஏறும் பழக்கம் சனாதன தர்மத்தில் கூறுகிறதா.?


உடன்கட்டை ஏறும் பழக்கத்திற்கும் இந்து மதத்திற்கும் தொடர்பில்லை. அவ்வாறு தொடர்பு இருந்திருந்தால், இன்றும் அது தொடர்ந்து வந்திருக்க வேண்டுமே. அல்லது உடன்கட்டை ஏறும் பழக்கத்தை நிறுத்தியவுடன் இந்து மதம் அழிந்திருக்க வேண்டுமே! ஆகவே இந்து மதத்திற்கும் உடன்கட்டை ஏறும் பழக்கத்திற்கும் தொடர்பில்லை என்பது தெளிவு. இருந்தாலும் இது பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இந்துக்கள் மறுபிறவி கோட்பாட்டை நம்புகிறார்கள். தனக்கு வாய்க்கும் மனைவி ஏற்கனவே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டவள் என்று ஒரு காலத்தில் நம்பினான். ஆகவே எத்தனை பிறவிகள் பிறந்து இந்தாலும், நான் உன் கணவன், நீ எனக்கு மனைவி. இதை யாராலும் மாற்ற முடியாது என்பது அவர்கள் எடுத்துக்கொள்ளும் சங்கல்பம்.

இவ்வாறு ஒரு பிறப்பில் சேரும் கணவன் மனைவியே ஏழு பிறப்பிலும் கணவன் மனைவியாக இருப்பார்கள் என்பது இந்துமதத்தின் கோட்பாடு இல்லை. ஆனால் மக்கள் இதை நம்பினார்கள். அவர்களின் சங்கல்பம் உறுதியாக இருந்தால், அதே போல் நடக்கும் என்பதை இந்துமதம் ஏற்றுக்கொள்கிறது.

இந்த பிறவியில் ஒருவனுக்கு மனைவியாக இருந்துவிட்டு, அடுத்த பிறவியில் பெண்ணாக பிறந்தால்,இன்னொருவனுக்கு மனைவியாக இருப்பது என்பது நினைத்துப்பார்ப்பதற்கு சங்கடமாக தான் இருக்கிறது. ஆனால் புதிதாக கிடைக்கும் பிறவியில் புதிய மூளை கிடைத்துவிடுவதால் பழையவை மறந்துவிடுகின்றன. ஆனாலும் பழைய நினைவுகள் உள்ளே புதைந்திருக்கும் என்பதை இந்துமதம் கூறுகிறது.

ஆகவே புதிய பிறவியில் வேறு யாருக்கோ மனைவியாக இருந்தாலும் கூட, முற்பிறவில் வாழ்ந்த பழைய நினைவுகள் ஆழ்மனத்தில் புதைந்திருக்கும். தர்க்கரீதியாக பார்த்தால், ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு ஆண்மகனுக்கு மனைவியாக வாழ்வது என்பது கற்பு நிலையின் வீழ்ச்சி தான்.

இதை சரி செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வது? ஒரு பிறவியில் சேர்பவர்கள் முக்திநிலை அடையும் வரை மீண்டும்,மீண்டும் பிறந்து மீண்டும் மீண்டும் திருமணம் செய்துகொண்டு வாழவேண்டும். அவர்களின் ஜோடி மாறக்கூடாது. ஒருவேளை இந்த பிறவியில் அனுபவிக்க முடியாதவைகளை அடுத்த பிறவியில் அனுபவித்துக்கொள்ளலாம். அவசரம் இல்லை. வாழ்க்கையில் எதற்கும் அவசரப்படத்தேவையில்லை. யாரும் யார்மீதும் கோபப்படத்தேவையில்லை. ஏனென்றால் உனக்கு நான் எனக்கு நீ. நாம் எத்தனை பிறவிகள் பிறந்தாலும் சேர்ந்தே இருப்போம்.

சரி வாழ்வில் மட்டும் தான் சேர்ந்து இருப்போமா? இல்லை. சாவிலும் சேர்ந்தே சாவோம். நரகத்திற்கு செல்வதாக இருந்தால் சேர்ந்தே செல்வோம். சொர்க்கத்திற்கு செல்வதாக இருந்தால் சேர்ந்தே செல்வோம். ஆகவே நாம் எப்போதும் சேர்ந்தே இருப்போம். அவ்வாறு சேர்ந்தே வாழும் ஜோடிகள் கடவுளை நம்பவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. ஏனென்றால் அவர்களிடம் உள்ள காதல் தான் கடவுள். அது தான் எல்லையற்ற இன்பம். அது தான் காலத்தை கடந்தது.

இவ்வாறு வாழும் போது எல்லையற்ற அன்பில் வாழும் ஜோடிகளின் உடல் என்பது ஏதோ காரணத்தினால், இறந்துவிடும் போது, இன்னொருவரால் அதை தாங்கிக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் ஈடுடல் ஓர் உயிர். அவர்களின் உடல்தான் வேறே தவிர அவர்களுக்குள் இருந்தது ஓர் உயிர்தான். ஒரு உடல் இதோ மாண்டுவிட்டது. இனி மற்றொரு உடல் எப்படி வாழும். வாழாது. ஆகவே கணவன் இறந்த உடன் மனைவியின் உயிரும் பிரிந்துவிடும். அவ்வாறு பிரிந்துவிடுவது தான் சொர்க்கம். அவ்வாறு பிரிவது தான் அன்பின் உச்சம்.

ஆனால் இந்த நிலை உண்மையாக நேசிக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே சாத்தியமாகும்.

இந்த பிரபஞ்சத்தில் ஒரு நியதி இருக்கிறது. மனித அன்பின் உச்சத்தை இந்த உடலால் தாங்கிக்கொள்ள முடியாது. ஒரு ஆணும் பெண்ணும் உண்மையில் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தால்,அந்த அன்பில் காமம் என்பது துளிஅளவு கூட இல்லாமல் இருந்தால், அவர்களால் இந்த உலகில் வாழமுடியாது. ஏனென்றால் தூய காதலே இறைவன். இறைவனுக்கு உடல் இல்லை. இந்த காதலுக்கும் உடல் இல்லை.அப்படியானால் இந்த காதலை இந்த உடல் எப்படி தாங்கிக்கொள்ளும். ஒருபோதும் அதனால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே இயற்கை அவர்களது உடலை அழித்துவிடுகிறது. தற்கொலை செய்து கொள்வது பற்றி பேசவில்லை. அது உண்மைக்காதலில் வெற்றியல்ல,அது தோல்வி. ஏனென்றால் அவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பிறகு அவர்கள் பேய் உடலில் வாழவேண்டியிருக்கும். அப்போது உண்மை அன்பு மறைந்துவிடும்.

ஆகவே இவ்வாறு உண்மையாக வாழும் ஆணும் பெண்ணும் காதலின் உச்சத்தை அடையும்போது, இயற்கை ஒருவரை பிரித்துவிடும். இந்த வேதனை தாங்காமல் இன்னொருவரும் இறந்துவிடுவார். ஆனால் இந்த இறப்பு என்பது இயற்கையாக நிகழவேண்டும். காதலன் இறந்துவிட்டான் என்பதை அறிந்ததும் மனைவியின் உயிரே போய்விட்டது போல உணர்ச்சி எழும். அப்போது அவளது மனம் ஒடுங்கிவிடுகிறது. இதயம் நின்றுவிடுகிறது. ரத்தஓட்டம் நின்றுவிடுகிறது. மூச்சுநின்றுவிடுகிறது.இவ்வாறு அவள் இந்த உடலைவிட்டுவிட்டு சூட்சும உடலை அடைகிறாள். அந்த சூட்சும உடலில் கணவனும் மனைவியும் பல காலம் வாழ்கிறார்கள். அது தான் சொர்க்கத்து வாழ்க்கை. பிறகு அடுத்து எங்கே பிறப்பது எவ்வாறு மீண்டும் ஒன்று சேர்வது என்று முடிவு செய்துகொண்டு, அதே போல பிறக்கிறார்கள். இது தான் திருமணம் சொர்க்கத்தில் முடிவு செய்வது என்பது. இதன் பிறகு அவர்கள் மனிதர்களாக பிறந்த போது பழைய நினைவுகள் மறந்துவிடும். ஆனாலும் அவர்கள் ஏற்கனவே முடியு செய்து வைத்திருந்த படி ,எவ்வளவு இடற்பாடு வந்தாலும்,அவற்றை எதிர்த்து,மீண்டும் ஒன்று சேர்கிறார்கள்.

உண்மையான காதல் கொண்டவர்கள் இந்த உலகத்தில் ஒருசிலர் தான். மற்றவர்கள் காமத்தின் வீழ்ந்துவிடுகிறார்கள். உண்மையன்பு என்பது காமம் கலக்காதது. ஒரு சமுதாயத்தில் ஒரு ஜோடி இதே போல் இறந்துவிட்டால்,அதை மக்கள் வரவேற்பார்கள். ஆஹா அற்புதமான ஜோடி என்பார்கள். இந்த இறப்பு என்பது இயற்கையாக நிகழவேண்டும்.

உடன் கட்டை ஏறும் பழக்கம் எவ்வாறு சமுதாயத்தில் சிக்கல் நிறைந்தவையாக மாறியது என்பதை பார்ப்போம்.

கணவன் இறந்த உடன் மனைவி இறந்துவிடுகிறான். என்று வைத்துக்கொள்வோம், அது பத்தினிக்கு அழகு என்று சமுதாயம் சொல்லும். ஆனால் அதே போல் மனைவி இறந்ததும் கணவன் இறந்துவிட வேண்டும். அவ்வாறு இந்தால் அது நல்ல கற்புள்ளகணவன். மனைவி இந்த பிறகும் கணவன் சாகாவிட்டால்,அவர்களுக்குள்ள காதலில் ஏதோ குறைபாடு இருக்கிறது என்று தான் அர்த்தம்.

கால ஓட்டத்தில் இந்த பழக்கம் கற்பை சோதிப்பதற்கான ஒரு நிலையாக மாறிவிட்டது. கணவன் இறந்ததும் மனைவி இறக்காவிட்டால்,அவள் கற்பு நிறைந்தவள் இல்லை. அவர்கள் காதலில் குறை உள்ளது.அவள் கணவனை நேசிக்கவில்லை என்று சமுதாயம் பேச ஆரம்பித்தது. ஆகவே கணவனை இழந்த பெண்கள் தங்களுக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக கணவனின் உடல் எரிக்கப்படும்போது, அவளும் அதில் விழுந்து இறந்து போவாள். அவ்வாறு பெண்கள் தீயில் விழுந்து எரிவது, நாளுக்கு நாள் அதிகமானது. அது சமுதாய பழக்கமாக மாறிவிட்டது.

முற்காலத்தில் ஆணும் பெண்ணும் வயது வந்த பிறகு காதிலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்தது. சுயம்வரம் என்று சொல்லப்படுவது நடைபெற்று வந்தது. சுயம்வரம் என்பது கணவனை தானே தேர்வுசெய்து கொள்வது.ஆனால் காலம் மாறமாற இந்த சுயம்வரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்து. ஆண்கள் தங்களுக்கு தேவையான பெண்ணை பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வது, திருமணத்திற்கு முன்பே கூடிவாழ்வது போன்றவை சமுதாயத்தில் வளர ஆரம்பித்தன. சிலர் இதே போல் கூடிவாழ்ந்துவிட்டு, பிறகு கைவிட்டுவிடுவதும் நடைபெற்றது.ஆகவே இந்த சுயம்வரம் பலவேளைகளில் சமுதாயத்தில் சிக்கல் நிறைந்தவையானது. எனவே இது மாற்றப்பட்டன.

ஐந்து வயது வந்தவுடனே,பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். இதனால் பெண்களோ,ஆண்களோ சுயமாக துணையை தேடிக்கொள்ள முடியாது.

சிறுவயதில் திருமணம் செய்து கொண்டபின், ஒருவேளை கணவன் இறந்துவிட்டால். அந்த பெண் அதன்பிறகு சமுதாயத்தில் வாழ்ந்தால், மற்ற ஆண்களுடன் தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சமுதாயம் மீண்டும் சிக்கலாகிவிடும். ஆகவே பேசாமல் இந்த பெண்ணை கணவனின் உடலோடு சேர்த்து எரித்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். வலுக்கட்டாயமாக இளம் பெண்கள் தீயில் கொழுத்தப்படார்கள்.

இது கொடுமை என்பதை படிப்படியாக மக்கள் உணர ஆரம்பித்தார்கள். பலரின் எதிர்ப்புக்கு பிறகு இந்த பழக்கம் நிறுத்தப்பட்டது.

கணவனை இழந்த பெண்கள் சாகவேண்டாம். ஆனால் அவளை வாழாவெட்டி ஆக்கிவிடுவோம் என்று முடிவு செய்தார்கள். அதாவது வாழ்ந்துகொண்டிருக்கும் பிணம். பார்ப்பதற்கு வாழ்வது போல தெரிந்தாலும், அவள் ஒரு பிணமாகவே கருதப்பட்டாள். வெறும் தரையில் தான் படுக்கவேண்டும், உடலை முழுவதும் மூடிக்கொள்ள வேண்டும், வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது.மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும்.பூ,பொட்டு,அணிகலன் எதுவும் இருக்கக்கூடாது. சோற்றில் உப்பு,புளி,காரம் சேர்த்துக்கொள்ளக்கூடாது. ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் உணவு உண்ண வேண்டும். அவ்வப்போது உண்ணாநோன்பு இருக்க வேண்டும். பெண்களுடன் மட்டுமே பேசவேண்டும். அதுவும் அமைதியாக தரையை பார்த்து தான் பேச வேண்டும். இவ்வாறு அந்த பெண்கள் வாழும் நடைபிணங்களாக வாழ்ந்து வந்தார்கள்.

காலப்போக்கில் இந்த நடைமுறைகள் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதி என்பதை மக்கள் உணர ஆரம்பித்தார்கள். மனைவியை இழந்த ஆண்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் போது,பெண்கள் ஏன் விதவைகளாக வாழவேண்டும்?ஆகவே கணவனை இழந்த பெண்கள் மீண்டும் ஒரு திருமணம் செய்துகொள்ளலாம் என்ற பழக்கம் மக்களிடையே வளர ஆரம்பித்தது.

இப்போது இதிலும் சமுதாயம் சிக்கல்களை சந்தித்தது. திருமணம் செய்து கொண்ட பிறகு கணவனது குணம் சரியில்லை என்பது தெரியவந்தால், அந்த திருமணமே வீண். திருமணத்திற்காக செய்த செலவுகள் வீண். காலம் வீண். ஆகவே திருமணத்திற்கு முன்பே, ஒரு ஆணுடனோ, அல்லது பெண்ணுடனோ வாழ்ந்துவிட்டு, அவர்கள் சரியாக வருவார்கள் என்று தெரிந்தால் திருமணம் செய்துகொள்ளலாம் இல்லாவிட்டால், இன்னொருவனை சோதித்து பார்க்கலாம். இவ்வாறு மாறிமாறிமாறி சோதித்துவிட்டு, கடைசியில் ஏதாவது ஒருவனையோ அல்லது ஒருத்தியையோ திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று மக்கள் கருத ஆரம்பித்துவிட்டார்கள்.

நண்பர்களே இவையெல்லாம் சமுதாயத்தில் நாம் கண்டது, இவைகள் சமுதாயத்தின் நடைமுறைகள் தானே தவிர, இவற்றிற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை.

ஏன் தொடர்பில்லை என்று கூற வேண்டும்? இந்துமதம் இதை ஆதரித்ததே என்று நீங்கள் கேட்கலாம்

சமுதாய நடைமுறைகள் காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே இருக்கின்றன. சிலர் மக்களிடம் நமது மதம் இவ்வாறு கடைபிடிக்கசொல்கிறது. இதை செய்யாவிட்டால் , இன்னஇன்ன பாவம் வரும். ஆகவே இதை பின்பற்று என்று சொல்கிறார்கள். பாமர மக்களும் மதம் சொல்வதானால் சரிதான் என்று நினைத்து,அதை பின்பற்றுகிறார்கள்.இவ்வாறு சமுதாயம் தான் செய்யும் வேலைகளுக்கெல்லாம் மதத்தை பயன்படுத்திக்கொண்டது. இவ்வாறு இந்துமதம் கெட்டபெயரை சம்பாதித்துள்ளது.

இன்று சமுதாயத்தில் நடக்கும் திருமண உறவுகளுக்கும்,சமூக நடைமுறைகளுக்கும் மதம் எப்படி காரணம் இல்லையோ, அதே போன்றே அன்றைய உடன்கட்டை ஏறுதல்,விதவைகள் வாழ்க்கை போன்றவற்றிலும் இந்து மதத்திற்கு சம்மந்தம் இல்லை

No comments:

Post a Comment