Sunday 11 June 2017

கடவுளின் அணுத்துகள் / ஹிக்ஸ் போஸான்”  என்பதை கண்டுபிடிச்சாச்சா?


பிரபஞ்சம் உருவான வரலாற்றை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், ஆய்வின் முக்கியமான முன்னேற்றமாக “கடவுளின் அணுத்துகள்” என்று அழைக்கப்படும் “ஹிக்ஸ் போஸான்” (Higgs boson) என்ற பொருளைக் கண்டுபிடித்துள்ளது குறித்த ஒரு சிறு ஆய்வு.


நிறை எங்கிருந்து வந்தது
உலகம் சூன்யத்திலிருந்து தோன்றியதாகக் கூறும் விஞ்ஞானிகள் அதனை நிரூபிப்பதற்கான தங்களின் முயற்சியில் பல்வேறு பிரச்சனைகளை சந்திந்து வருகின்றனர். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அதிர்வெடியினால் உலகம் தோன்றியிருக்கலாம் என்னும் தங்களின் கொள்கையை, அதிர்வெடிக் கொள்கை (Bing Bang) என்று பெயரிட்டுள்ளனர். எல்லையற்ற வெப்பமும் அழுத்தமும் தங்களின் சுய ஈர்ப்புவிசையினால் இணைந்தபோது அதிர்வெடி நிகழ்ந்ததாகவும், அதனால் எலக்ட்ரான், புரோட்டான், மற்றும் நியூட்ரான்கள் தோன்றி ஜடப் பொருட்கள் தோன்றத் தொடங்கின என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதில் அவர்களுக்கு மிகுந்த பிரச்சனையைக் கொடுத்து குழப்பச் செய்யும் ஒரு கேள்வி: இந்த அடிப்படைப் பொருட்களுக்கான நிறை (Mass) எங்கிருந்து வந்தது என்பதாகும்.

ஹிக்ஸ் போஸான்
1964இல், பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானியும் அவரது குழுவினரும் இணைந்து ஹிக்ஸ் கொள்கை (Higgs theory) என்னும் கொள்கையை வெளியிட்டனர். “மிகச்சிறிய ஆரம்பநிலை மூலக்கூறுகள், வெற்று இடத்திலும் சற்று பலம் கொண்ட ஒரு பரிமாணத் தளத்துடன் (Quantum Field) தொடர்பு கொண்டபோது அவற்றிற்கு நிறை உண்டானது,” என்பதே அவர்களின் (அனுமானக்) கொள்கை. அந்த பரிமாணத் தளத்திற்கு ஹிக்ஸ் தளம் என்றும், அத்தளத்தில் இருந்திருக்கலாம் என்று கற்பனை செய்யப்பட்ட சிறிய அணுத்துகள்களுக்கு ஹிக்ஸ் போஸான் (Higgs boson) என்றும் பெயரிட்டனர்.

பிரபஞ்சம் தோன்றியதற்கான அதிர்வெடிக் கொள்கையில் இருக்கும் பல்வேறு குறைகளையும் பிரச்சனைகளையும் சமாளிப்பதற்கு ஹிக்ஸ் கொள்கை உதவியாக அமைந்ததால், அதனை பெரும்பாலான விஞ்ஞானிகள் அடித்தளமாக ஏற்றுக் கொண்டனர். ஏதேனும் ஒன்றினை அடித்தளமாக ஏற்க வேண்டுமெனில், அதற்கென்று சில விதிகள், தன்மைகள், மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும். ஹிக்ஸ் கொள்கையானது ஈர்ப்புவிசையை விளக்கத் தவறுவது மட்டுமின்றி, ஆராய்ச்சியில் சில முரண்பாடுகளையும் கொண்டிருந்தது; இருப்பினும், அதனை விஞ்ஞானிகள் அடித்தளமாக ஏற்று செயல்படத் தொடங்கினர். ஹிக்ஸ் தளம் மற்றும் ஹிக்ஸ் போஸான் ஆகிய இரண்டில் எதற்குமே எந்தவொரு ஆதாரமும் இல்லாததால், ஹிக்ஸ் போஸோனின் இருப்பினை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

கடவுளின் அணுத்துகள்
ஹிக்ஸ் போஸான் “கடவுளின் அணுத்துகள்” என்றும் அழைக்கப்படுகிறது. பிரபஞ்சம் தோன்றியதில் இருக்கும் விடுகதையைத் தீர்ப்பதற்கு இஃது உதவும் என்று அவர்கள் நம்பினர். நோபல் பரிசு பெற்றவரான லியோன் லேடேர்மேன் என்பவர் ஹிக்ஸ் போஸோனிற்கு “கடவுளின் அணுத்துகள்” என்று பெயரிட்டார்.

கடவுளின் அணுத்துகள்: பிரபஞ்சம் பதில் என்றால், கேள்வி என்ன? (The God Particle: If the Universe Is the Answer, What is the Question?) என்னும் தனது புத்தகத்தை பிரபலமாக்குவதற்காக லியோன் அவர்கள் “கடவுளின் அணுத்துகள்” என்ற பெயரை உபயோகித்தார். “கடவுள்” என்னும் தலைப்புடன் விஞ்ஞான புத்தகம் வெளிவந்தால், அது விரைவாக விற்றுவிடும் என்பதே அவரது எண்ணம். மேலும், அணு விஞ்ஞானத்தில் இத்துகள் முக்கிய பங்காற்றியுள்ளபோதிலும் கண்டறியப்படாமலே இருந்து வந்தது. ஆயினும், ஹிக்ஸ் போஸோனிற்கு கடவுளின் அணுத்துகள் என்று பெயர் கொடுத்ததை ஹிக்ஸ் விரும்பவில்லை. கடவுள் என்று ஒருவர் இல்லாதபோது, அவரை இதனுள் கொண்டுவருவது ஒரு பெரிய வேடிக்கை என்பது அந்த நாத்திக விஞ்ஞானியின் கருத்தாகும்.

ஹிக்ஸ் போஸோனின் ஆராய்ச்சி
ஹிக்ஸ் போஸான் என்று ஒன்று உண்டா என்பதை அறிவதற்கான முயற்சியில் முதலில் ஈடுபட்ட அமெரிக்க விஞ்ஞானிகள், சுமார் 11,000 கோடி ரூபாயை செலவழித்த பின்னர், அதனால் பலனில்லை என்று கைவிட்டனர். இருப்பினும், சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரில் செயல்படும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அப்பணியினை தொடர்ந்து மேற்கொண்டது. சுமார் முப்பது நாடுகளைச் சார்ந்த 5,000 விஞ்ஞானிகள் இணைந்து, அணுக்களை துரிதப்படுத்துவதற்கான 17 மைல் சுற்றளவு கொண்ட மிகவும் சக்திவாய்ந்த இயந்திரம் ஒன்றினை தயாரித்தனர். ஒளியின் வேகத்தைக் காட்டிலும் சற்றே குறைந்த வேகத்தில் துகள்களை (புரோட்டான்களை) மோதச் செய்வதற்காக அதனை வடிவமைத்தனர். அவற்றின் மோதல் மிகவும் சிறியதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் அமைந்தது. அந்த மோதலினால் மிகச்சிறிய நுண்ணிய துகள்கள் தோன்றினால், அவை தோன்றும் அதே கணத்தில் மறைந்துவிடும் என்பதால், அதற்கு முன்பாக அதனை அறிவதற்கு உகந்தாற்போல நுண்கருவிகளையும் ஏற்பாடு செய்தனர்.

ஆராய்ச்சியின் முடிவு
ஜுலை 4, 2012: ஆராய்ச்சி இயந்திரத்தில் 30,000 கோடி முறை மோதல்கள் ஏற்படுத்தப்பட்டு, அதனை ஆராய்ந்தபோது ஹிக்ஸ் போஸோனின் தன்மைகளை ஒத்த துகளை விஞ்ஞானிகள் தங்களது கருவியில் கண்டனர். அது ஹிக்ஸ் போஸோனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து, அதனைக் கண்டறிந்துவிட்டதாக முடிவு செய்து அறிவித்தனர். இதன் கண்டுபிடிப்பு விஞ்ஞான உலகில் ஒரு திருப்புமுனையாக அறிவிக்கப்பட்டது.

பின்னர், ஜுலை 12ஆம் நாளன்று, ஹிக்ஸ் போஸோனைப் போலத் தோன்றிய அணுத்துகள்கள் ஒரு கருத்துதானே தவிர உறுதியானது அல்ல என்று மற்றொரு அறிக்கையை வெளியிட்டனர். மேலும், அடிப்படை மூலக்கூறுகள் எடையை எவ்வாறு பெற்றன என்பதற்கு ஹிக்ஸ் கொள்கையைத் தவிர மேலும் பத்து (அனுமானக்) கொள்கைகளை கைவசம் வைத்திருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், இதனை இன்னும் சில வருடங்களில் முழுமையாக கண்டுபிடித்துவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சுமார் 55,000 கோடி ரூபாயையும், வருடங்களையும் செலவழித்த பின்னர், “இது ஹிக்ஸ் போஸோனாக இருக்கலாம்,” என்று மற்றொரு யூகத்தை வெளியிடுகின்றனர். உலகில் செய்ய வேண்டிய செயல்கள் எத்தனையோ இருக்கும்போது, இத்தகு ஆராய்ச்சியில் நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்த பின்னரும் இதுவரை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்றால், இல்லை என்பதே பதிலாக உள்ளது.

கேள்விகள் முடிந்துவிடுமா?
அப்படியே ஹிக்ஸ் போஸோனை உண்மையாகக் கண்டறிந்துவிட்டாலும், அதில் பிரபஞ்ச கேள்விக்கான பதில் முடிந்துவிடாது! மற்றுமொரு கேள்வி மீண்டும் எழும்:  ஹிக்ஸ் தளமும் ஹிக்ஸ் துகள்களும் எங்கிருந்து வந்தன? இக்கேள்விக்கான பதில் இதுவரை கற்பனை செய்யப்படவில்லை. அதற்கு ஏதேனும் ஒன்றை கற்பனை செய்தால், அதற்கான ஆதாரம் என்ன என்று கேள்விகள் சுழன்று கொண்டே இருக்கும். இம்முயற்சிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுப்பதில்லை, மாறாக பிரச்சனையை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுகின்றன.

கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அதனைத் தள்ளிப் போடுவதையும், அதற்காக ஆராய்ச்சி நடத்துவதையும் புத்திசாலித்தனம் என்று நவீன விஞ்ஞானிகள் நினைக்கின்றனர். இது நிச்சயம் துரதிர்ஷ்டமே. பிரபஞ்சத்தில் பரவியிருக்கும் சக்தியைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இந்த விஞ்ஞானிகள், இந்த சக்திகள் அனைத்திற்கும் தோற்றுவாயாக, சக்திகளைக் கட்டுப்படுத்துபவராக ஒரு நபர் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகின்றனர்.

 முட்டாளும் விஞ்ஞானியும்

ஹிக்ஸ் போஸோனைக் கண்டுபிடிப்பதற்கான இயந்திரங் களும் முயற்சிகளும் தானாகத் தோன்றின, ஒன்றுமே இல்லாமல் திடீரென்று தானாக வந்தன என்று யாரேனும் கூறினால், அவ்வாறு கூறும் நபரை பைத்தியம் என்றோ முட்டாள் என்றோ கூறுவர். ஆனால் இந்த இயந்திரங்களைக் காட்டிலும் பல மடங்கு நுணுக்கமான இயந்திரமான இந்த உலகமானது தானாகத் தோன்றியது, சூன்யத்திலிருந்து தோன்றியது என்று யாரேனும் கூறினால், அவரை விஞ்ஞானி என்று உலகம் பாராட்டுகிறது. வெறும் வாயில் கூறுபவன் முட்டாள், பல்லாயிரம் கோடிகளை செலவழித்து கூறுபவன் விஞ்ஞானி. என்னே உலகம்!

ஆனால், இதுவரை ஆராய்ச்சி செய்து துளியும் நிரூபிக்கப் படாத அதிர்வெடிக் கொள்கை இன்றைய பாடப் புத்தகத்தில் உள்ளதே! வருடந்தோறும் படிக்கப்படும் இக்கொள்கை இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இதனைப் பாடப் புத்தகத்தில் வைப்பது எப்படி நியாயம்?

திரு. பிரணாப் முகர்ஜியே ஜனாதிபதி என்பது ஏறக்குறைய உறுதியானபோதிலும், தேர்தலுக்கு முன்பே அதனை வெளியிட்டது தவறு என்று கூறுவோர், அதிர்வெடிக் கொள்கையினைப் பாடப் புத்தகங்களில் வைத்திருப்பதை ஏன் எதிர்ப்பதில்லை? மக்களுக்கு அரசியல் தெரிந்த அளவிற்கு அறிவியல் தெரியவில்லை என்பதையும், விஞ்ஞானிகள் என்போர் மக்களை ஏமாற்றுகின்றனர் என்பதையும் நாம் அறிய வேண்டும்.

1 comment: