Monday 19 June 2017

ஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கை இன்றைக்கும் ஏற்கத் தக்கவையா?

 எட்டாம் நூற்றாண்டில்  வாழ்ந்தவரான அதி சங்கரர் சிவபெருமானின் அவதாரமாவார்.  அவர் போதித்தது அத்வைதம் என்ற கொள்கையாகும்.  இன்றைக்கு உலாத்திக் கொண்டிருக்கும் போலிச் சாமியார்கள் எல்லோரும் இவரது கொள்கையின் சாயலைத்தான் எடுத்து தங்களுக்குப் பூசிக் கொண்டு ஊரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.  பலருக்கும் ஏற்ப்புடையதாகத் தோன்றும் இவை,  "உண்மையல்ல, சாத்திரத்தில் சொல்லப் படாத ஒன்றை பொய்ப் பிரச்சாரம் செய்தேன்" என்று அவரே சொன்னால் வியப்பாகத்தானே இருக்கும்!!

பிரஞம் பிரம்மம் - பிரம்மம் தூய உணர்வு
அயமாத்மா பிரம்மம் -- ஆத்மாவே பிரம்மம்
தத் துவம் அசி   - நீதான் அந்த உணர்வு
அஹம் பிரம்மாஸ்மி -  நானே பிரம்மம்

இதைப் பற்றி சுருக்கமாகச் சொன்னால், "பிரம்ம சத்ய ஜகன் மித்ய"  என்பதாகும்.  ஆதிசங்கரர் பிரம்மம் தான் எல்லாமும் என்றார்.  அதற்க்கு உருவம், இன்னபிற பண்புகள்  எதுவும் இல்லை, பிரம்மம் என்பது, "கோபம், அன்பு, வருத்தம், மகிழ்ச்சி போன்றவற்றை உணர்ந்து கொள்ளக் கூடிய ஒரு நபரும் [Personality] இல்லை" என்றார்.  மொத்தத்தில் பிரம்மம் என்றால் எந்த விதத்திலும் வர்ணிக்கவே முடியாதது!

பிரம்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லவே இல்லை என்றார்.  அதாவது பிரம்மம் என்பதே இறுதியில் நிலைத்திருக்கும், இந்த படைப்பு  அனைத்தும் மாயை, நிஜத்தில் இல்லவே இல்லை".  ஜீவன்களுக்கு  தான் என்ற எண்ணம் மாயையில் சிக்குண்டு இருப்பதால் தான் வருகிறது, முக்தியடைந்தால் நாம் அந்த பிரம்மமே, வேறல்ல என்பதை உணர்ந்து விடுவோம் என்றார்.

"அப்படியானால், முதற்க்கண் நாம் உருவானது எப்படி?" என்ற கேள்விக்கு, பிரம்மம் மாயையின் பிடியில் சிக்கும்போது ஜீவன்களாகிறது, என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

 இவருக்கு அடுத்து 11-ஆம் நூற்றாண்டின் பிற்ப்பகுதியில் தோன்றிய  ஸ்ரீஇராமானுஜர்  இந்த விளக்கத்தை  எதிர்த்து கேள்விகளை எழுப்பலானார்.  "பிரம்மம் தான் எல்லாவற்றுக்கும் மேலானது, அதற்க்கு மிஞ்சியது எதுவுமே இல்லை என்றால், அது எப்படி மாயையின் கட்டுப் பாட்டிற்குள் வர முடியும், அப்படி வரும் என்றால் மாயை பிரம்மத்தை விட மேலானது என்று ஆகிவிடுமே?

 மேலும், பிரம்மம் என்பது பகுக்க முடியாதது எனில், இங்கே இருக்கும் கணக்கிலடங்கா ஜீவன்களாக பகுக்கப் பட்டது எப்படி? " என்று கிடிக்கிப் பிடி போட்டார்.  இந்தியாவைச் சுற்றி மேற்கொண்ட பயணங்களில் பல்வேறு விதத்தில் ஆதி சங்கரரின் கொள்கைகளை ஸ்ரீஇராமானுஜர் தோற்கடித்து, இறைவன் உருவம் கொண்டவன், அவனுக்கு எண்ணற்ற கல்யாண [Auspicious] குணங்கள்  உண்டு. ஜீவன் ஒருபோதும் பரப் பிரம்மனான பகவானுடன் ஐக்கியமாக முடியாது, சேவகனாகத்தான் நிலைத்திருக்க முடியும், இந்த படைப்பு மாயை இல்லை, நிஜம்தான் ஆனால் நிலையற்றது,  காலத்தால் அழிந்து போகக் கூடியது என்று சாஸ்திரங்கள் மூலமாக ஆதரப் பூர்வமாக நிலை நிறுத்தினார்.

 இவரை அடுத்து வந்த ஸ்ரீ மத்வாச்சார்யாரும் ஆதி சங்கரரின் கொள்கைகளைத் தவிடுபொடியாக்கினார்.  தற்போது நமக்குள் ஒரு கேள்வி எழும், மேற்க்கண்டவாறு இரண்டு ஆச்சார்யர்கள் தவறு என்று ஆதாரப் பூர்வமாக நிரூப்பிக்கும்படியான ஒரு கொள்கையை எதற்காக சிவனின் அவதாரமான ஆதி சங்கரர் போதிக்க வேண்டும்?

 மேற்கண்ட கேள்விக்கு பதிலைத் தேடும் முன்னர் ஆதி சங்கரர் எந்த மாதிரியான ஒரு காலகட்டத்தில், எதற்காகத் தோன்றினார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.  கி.மு. 243 வாக்கில்  அசோகரின் ஆட்சியின் ஆதரவோடு இந்தியா முழுவதும் புத்த மதம் பரவியிருந்தது.   புத்தர் விஷ்ணுவின் அவதாரமாவார்.  இதை வைணவக் கவி, ஜெயதேவ் [நான் இல்லீங்க!!]  தனது தசாவதார ஸ்தோத்ரத்தில் இவ்வாறு பாடுகிறார்.


nindasi yajna-vidher ahaha sruti-jatam
sadaya-hridaya darsita-pasu-ghatam
kesava dhrita-buddha-sarira jaya jagadisa hare

யாகங்களில் பலியிடப்படும் உயிர்களின் மேல் பரிவு கொண்டு, அவற்றைக் காக்க புத்தரின் வடிவில் வந்து உயிர்பலியிடுவதை தடுத்து நிறுத்திய கேசவனே,  ஜகன்னாதனே தங்களுக்கு ஜெயம் உண்டாகட்டும்.

யாகங்களின் போது உயிர் பலியிடப் படும்போது அவற்றுக்கு நேரடியாக மனித பிறவி கிடைக்கும்.  ஆனால் தகுதியற்றவர்களால் யாகம் நடத்தப் படும் போது இது நடவாது.   மேலும், யாகங்களில் உயிர்ப் பலியிடுவது கலி யுகத்தில் தடை செய்யப் பட்டதாகும். இவ்வாறு உயிர்கள் முறையின்று கொள்ளப் படுவதை தடுத்து நிறுத்த புத்தர் அவதரித்தார்.  உயிர்ப்பலி வேண்டாம் என்றார். அதை எதிர்த்தவர்கள், வேதங்களை மேற்க்கொள் காட்டி "இது அனுமதிக்கப் பட்டுள்ளது" என்றார்கள்.  அதற்க்கு புத்தர், "வேதங்களை நான் நிராகரிக்கிறேன்" என்றார்.  இதன் விளைவாக இந்தியாவில் புத்தரின் கொள்கைகள் எங்கும் வியாபித்தது, வேதங்களைப் பின்பற்றுவது நின்று போனது.  கடவுள் என்று ஒன்று இல்லை, இறுதியில் சூன்யமே எல்லாம் என்று போதித்தார்.

இந்த நிலையில், வேதங்களை மறந்த மக்கள் மீண்டும் வேதங்களை பின்பற்றும் நிலையை ஏற்ப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.  புத்த மத்தத்தை முற்றிலும் தவறு என்று திடீரென போதித்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், எனவே வேதங்களின் போதனையை புத்தரின் போதனையைப் போலவே தோற்றமளிக்கும் படி செய்து போதிக்கும் வேலையை சிவ பெருமான் ஏற்றுக் கொண்டார்.  ஆதி சங்கரராக வந்தார்.  புத்தர் எல்லாம் சூன்யம் என்றார்.  இவரோ, சூன்யம் இல்லை, பிரம்மம் தான் இறுதியானது, ஆனால் அதற்க்கு குணமில்லை நிறமில்லை, வடிவமில்லை..... என்று எல்லாம் இல்லை என்றார்.  அதாவது, புத்தர் பூஜ்ஜியம் என்றார், ஆதி சங்கரர் ஏதோ இருக்கிறது ஆனால் அதன் மதிப்பு பூஜ்ஜியம் என்றார்.  அதே சமயம் வேத கலாச்சாரத்தை மக்களின் மத்தியில் கொண்டு வருவதில் ஆதி சங்கரர் வெற்றியடைந்தார்.  இவ்வாறு தான் செய்யப் போவதை பத்ம புராணத்தில் பார்வதியிடம் சிவ பெருமானே கூறுகிறார்.

mayavadam asat-sastram  pracchanam-baudham ucyate mayaiva kalpitam devim  kalau brahmana rupinah

 தேவி, கலியுகத்தில் பிராமணன் வடிவத்தில் நான் அவதரித்து சாத்திரங்களில் சொல்லப்படாத,  புத்தமதத்தைப் போலவே தோன்றும், மாயாவாதம் என்னும் ஒரு போலி  கொள்கையைப் பரப்புவேன். [asat-sastram இந்தப் பதத்தில் asat என்றால் sat [சத்யம்-உண்மை] என்பதற்கு எதிர்ப் பதமாகும்.

அதாவது அவர் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதற்கு எதிராக போதித்தார் என்று பொருள்.]  (Padma Purana 6.236.7)

சிவ பெருமான் மேலும் தொடர்கிறார்:
vedarthan maha-sastram mayavadam avaidikam
mayaiva kathitam devi jagatam nasakaranat

மாயாவாதம் என்னும் இந்த சக்திவாய்ந்த கொள்கை வேதங்களைப் போலவே தோன்றினாலும், அது உண்மையல்ல.  தேவி, உலகில் நான் செய்யப் போகும் பொய்ப் பிரச்சாரம் இதுவாகும். (Padma Purana 6.236.11)


 வாழ்நாள் முழுவதும் பிரம்மம் மட்டுமே உண்மை என்று போதித்த ஆதிசங்கரர் உலகை விட்டுப் புறப்படும் முன்னர் இறுதியாகச் சொன்னது இந்த பாடலைத்தான்:

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம்  மூடமதே
சம்பிராப்தே சந்நிகிதே காலே
ந ஹி ந ஹி ரக்ஷதி துக்ரியகரனே

 "முட்டாள்களே, மூடர்களே கோவிந்தனை வழிபடுங்கள்........  கோவிந்தனை வழிபடுங்கள்........  கோவிந்தனையே வழிபடுங்கள்.........   உங்களுடைய இலக்கணம், வார்த்தை ஜாலங்கள் எதுவும் சாகும் தருவாயில் உங்களை வந்து காப்பாற்றாது.

இது மட்டுமன்றி, பூரி ஜகன்னாதரைப் பற்றியும், நரசிம்மரைப் பற்றியும் அழகிய பாடல்களை ஆதி சங்கரர் வடித்துள்ளார், வடிவம் இறைவனுக்கு இல்லை என்றால் ஏன் இப்படி இறைவனின் வடிவில் உருகிப் போகும் பாடல்களை அவர் எழுத வேண்டும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.

 ஆதிசங்கரர் போதித்த கொள்கைகள் அந்த காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்ற மட்டுமே, அது இன்றைக்கு நமக்கு ஏற்ப்புடையதல்ல.  எனவே பின்பற்றவேண்டிய அவசியமும் இல்லை.  சங்கர மடத்தில் உண்மையில் துறவை பின்பற்றும் சன்னியாசிகளுக்கு மரியாதை செலுத்தலாம், எனினும் பின்பற்றத் தேவையில்லை.  

,  ஆதி சங்கரர் அன்றைக்குச் சொன்னதற்கு அந்த காலகட்டத்தில் ஒரு காரணம் இருந்தது,

எனவே தவிர்ப்போமே!!  ஆதி சங்கரர் போதித்த பஜ கோவிந்தம், ஜகன்னாதாஷ்டகம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் அவரது அத்வைதக் கொள்கைகள் நிராகரிக்கப் பட வேண்டியவையே.

1 comment:

  1. wrong information Adi shankara debated with dvaitins they lost advaita is real

    ReplyDelete