Saturday 8 September 2018


பூணூல் என்ன?





சமஸ்க்ருதத்தில் யக்ஞோபவீதம்.. அதாவது யக்ஞத்துக்கு உபவீதம்... நாம் செய்யக் கூடிய கர்மாக்களுக்கு யக்ஞம் என்று பெயர். யக்ஞங்களை செய்யும் முன் உபவீதமாக   அணிவதால் அது யக்ஞோபவீதம்.

பூணூலை அணியும் போது சொல்லும் மந்திரம்.

யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம்... ப்ரஜாபதே யத் ஸஹஜம் புரஸ்தாத்...
ஆயுஷ்யம்.. அக்ரியம் ப்ரதிமுக்ஞ ஸுப்ரம் யக்ஞோபவீதம் 
பலமஸ்து தேஜ:

“யக்ஞோபவீதம்.என்னும் பூணுல் மிகவும் பரிசுத்தமானது. ப்ரஜாபதியால் அருளப்பட்டது. வெண்மையான இதை அணிவதால் ஆயுள் அபிவிருத்தி ஆவதுடன், பலமும், ப்ரம்ம தேஜஸும் கிடைக்கிறது

இவ்வாறு அணிபவர்கள் பிராமணர்கள் என்கிறது. பிராம்மணன்  என்பவன்  பிறப்பால்  பிரம்மணீயத்தை  ஏற்றுக் கொண்டவன்  அல்ல.  பிரம்மம் என்பது  பரம்பொருளைக்  குறிக்கும்  சொல் . பரப்பிரம்மத்தை  குறிக்கும்  சொல்.  எவன் ஒருவன் பிரம்மத்தின்  தியானத்தில்  ஈடுபடுகிறானோ  அவனே  பிரம்மணீயத்தைத்  தழுவியவன். பிரம்மணீயம்  என்பது  ஜாதியல்ல.  அது  ஒரு  நிலை.  இறையானுபவத்தில்  ஈடுபடும் எவரும்  அந்த  நிலைக்கு  தங்களை  கொண்டு  செல்ல  பிரயத்தனப்படுபவர்கள்  ஆவார்கள்.

பூநூல் சாதி அடையாளமல்ல. மனிதன் மேம்பட்ட அறிவை குரு வழியாக பெற்று புதிய மனிதனாகிறான். அதன் காரணமாக ஏழு வயதுக்குள் உபநயனம் செய்து பூ நூல் அனுவித்து குருவிடம் கல்வி கற்க அனுப்பினர். கல்வி கற்குமுன்  அறியாத பிறவியாக இருந்தவன் பின் கல்வி அறிவு பெற்ற பிறவி ஆகிறான்.

இதை வேதம் இரு பிறப்பாளர் (த்விஜர்) என கூறும். இந்த சடங்கு காலப்போக்கில் சுருங்கி பிராமணர் எல்லோருக்கும் அடையாள கயிறாகி விட்டது. இந்த பூநூல் வருட வருடம் ஆவணி அவிட்டம் என்று அழைக்கப்படும் உபாகர்மா அன்று அவரவர் சம்பிரதாயப்படி தனது பூநூலை மாற்றி புதியதை அனைத்து கொள்ளலாம்.

பிராமணர்களின் தன்மைகளை பகவத் கீதை இப்படி சொல்கிறது..

"அமைதி, சுயக்கட்டுப்பாடு, தவம், தூய்மை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, பகுத்தறிவு, ஆத்திகம் ஆகிய இயற்கையான தன்மைகளில் பிராமணர்கள் செயல்படுகின்றனர்."- 18.42

எந்த ஜாதியினரும் பூணுல் அணியலாமா ?

விஷ்ணுவை வழிபடுவது மனித வாழ்வின் இலட்சியம் ஆகும். இதற்கான முதல் படியாக இருப்பதே வர்ணாஸ்ரம தர்மமாகும். உண்மையான வர்ணாஸ்ரம தர்மம் பகவத் கீதையில் (4.13) கூறப்படுவது .

'ஒருவனது குணத்தினையும், செயல்களையும் அடிப்படையாக வைத்து வெவ்வேறு மனிதர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.'  பகவத் கீதையில் (4.13)

அவர்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வகை வர்ணம்( சமுதாய பிரிவு ) அறியப்படுகின்றனர்.  இந்த பிரிவு கடவுள் உணர்வில் முன்னேறுவதற்கு பயிற்ச்சி அளிப்பதே வேத கலாச்சாரத்தின் நோக்கமாகும்.
  
உண்மையான வர்ணாஸ்ரம தர்மத்தில், ஒருவனின் வர்ணம் என்பது அவன் பெற்றுள்ள உண்மையான தன்மையை அடிப்படையாக கொண்டதே தவிர, பிறப்பு அல்லது கோத்திரத்தை வைத்து அல்ல. வேத,புராணங்களில் வரணத்தின் அடிப்படையில் வேத கல்வி அளிக்கப்படவில்லை !

இதற்கு ஸ்ரீ பாதராயணர் - சாந்தியோக்கிய உபநிஷத்தில் - 4:4 to 9 இல் சத்யகாமனின் வரலாறு மூலம் விளக்குகிறார்.

கெளதம முனிவர் ஒரு சூத்திரனான - சாத்யகாமனுக்கு  வேதம் சொல்லி கொடுப்பதாகவும். இதை படிக்க வர்ணங்கள் முக்கியமில்லை என கூறுகிறார் ! பின் அவனை சீடனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு வேத அறிவை சொல்லிக்கொடுத்து பிராமணனாக ஆகுகிறார் !
  
வேத சாஸ்திரங்களில் இருந்து உதாரணம் :

1. ரிஷப தேவர் தனது 100 புதல்வர்களில் - முதல் 10 பேரை சத்திரியர்களாகவும், அடுத்த 9 பேரை பாகவத பேச்சாளர்களாகவும், மீதமுள்ள 81 புதல்வர்களை வேத வேள்விகள் செய்யும் அந்தணர்களாகவும் (பிராமணர்களாக) மாற்றினார் என்று ஸ்ரீமத் பாகவதம் ஐந்தாம் காண்டம் சொல்கிறது.

2. அதே போல், பிராமணராக இருந்த அஜாமிளன் தனது கெட்ட நடத்தையினால் சூத்திரனாக மாறினான். - பாகவதம் 5 காண்டம்.

3. சத்திரிய குடும்பத்திலிருந்து வந்த விசுவாமித்திரர் காலப்போக்கில் தகுதிகளை வளர்த்து கொண்டு பின்னர் பிராமணராக மாறினார்.

4. இராவணன் பிராமண குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், அவனது அசுரர் சுபாவதினால் அவனை எவரும் ஒருபோதும் பிராமணராக ஏற்கவில்லை.

5. ஜபல உபநிஷத்தில், ஒரு சிறுவன் வேசிக்கு பிறந்தவனாக இருந்த போதிலும், அவனிடம் பிராமண தகுதிகள் இருந்த காரணத்தினால், அவனை கௌதம முனிவர் பிராமணராக ஏற்று கொண்டார்.

இவ்வாறு, வேத சாஸ்திரத்தில் பல இடங்களில் குணம், மற்றும் தொழிலை அடிப்படையாக வைத்து வர்ணங்கள்  பிரிக்க பட்டது .

வேத காலத்தில் பிறப்பு என்பது ஒரு அடையாளமாக எடுத்து கொள்ளபட்டதே தவிர, அதுவே நியதியாக ஏற்கப்படவில்லை. பொதுவாக வேத காலத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பவர் அக்குடும்பத்துக்குரிய குணத்துடன் இருப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் கலியுகத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், முறையான தகுதியினால் ஒருவன் பிராமணராக ஆக  முடியும் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.

மஹாபாரதத்திலிருந்து சில கூற்றுகள்..

மஹாபாரதம் வனபர்வம் பகுதி 311-ல், யுதிஷ்டிரர் யக்ஷனிடம் மேற்கொண்ட உரையாடலைக் காண்போம்.

யக்ஷன் யுதிஷ்டிரரிடம் வினவினார், "மன்னா, எத்தகைய பிறவி, நடத்தை, (வேத) படிப்பு அல்லது (சாஸ்திர) கல்வியினால் ஒரு மனிதன் பிராமணனாகிறான்?

யுதிஷ்டிரர் பதிலளித்தார், "யக்ஷனே, கேள்! பிறவியோ, படிப்போ, பிராமணத் தன்மைக்குக் காரணமில்லை. நடத்தையே பிராமணத் தன்மையாகும், இஃது எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். நடத்தையைக் கெடாமல் பராமரித்தால். அவன் ஒருபோதும் கெடு நிலையை அடைவதில்லை. நான்கு வேதங்களைப் படித்தும், ஒருவன் இழிந்தவனாக இருந்தால், அவன் சூத்திரன். புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவனே பிராமணன் என்று அழைக்கப்படுகிறான்."
  
அதேபோல ஒருமுறை பீமன் நகுஷன் என்ற பாம்பிடம் அகப்பட்டு, அதன் உணவாக இருந்த நிலையில், பீமனை விடுவிக்கவேண்டி நகுஷனிடம் யுதிஷ்டிரர் வேண்டினார். தான் கேட்கும் கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதிலளித்தால் பீமனை விடுவிப்பதாக நகுஷன் கூறினான். அவ்வுரையாடலில்,

          ஒரு சூத்திரன் பிறப்பால் மட்டுமே சூத்திரன் அல்ல என்றும், அதேபோல ஒரு பிராமணனும் பிறப்பால் மட்டுமே பிராமணன் அல்ல என்றும், யாரிடம் பிராமணருக்குரிய குணங்கள் இருக்கின்றனவோ அவரே பிராமணர் என்று ஞானமுள்ளோர் கூறியிருப்பதாகவும், யுதிஷ்டிரர் தனது முன்னவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நகுஷனிடம் பதிலளித்தார்.(வனபர்வம் பகுதி 83)

 மேலும், மஹாபாரதத்தின் வனபர்வம் பகுதி 211-ல் தர்மவியாதன் என்ற வேடனை கௌசிகர் அணுகி நுட்பமான விஷயங்கள் குறித்து கேட்டறிந்தபோது, வேடன் பின்வருமாறு கூறலானான்:

  "ஒரு மனிதன் சூத்திர ஜாதியில் பிறந்திருக்கலாம், ஆனால் அவன் நற்குணங்களைக் கொண்டிருந்தால், வைசிய நிலையையும் சத்திரியருக்கு ஒப்பான நிலையையும் அடையலாம். மேலும், அவன் நேர்மையில் உறுதியாக இருந்தால், பிராமணராக ஆகலாம்."

மேலும், மனு சட்டத்திலும் ஒரு வசனம் ...

சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ

அதாவது  சூத்திரன்  பிராமணனாகி  விடலாம்;  பிராமணனும்  சூத்திரனாகலாம்;  அதே  போல்,  க்ஷத்ரிய  மற்றும்  வைசிய  வர்ணங்களைச்  சார்ந்தவர்களின்  மகன்களும்,  மகள்களும் வேறு  வர்ணத்தை  அடையலாம்.    அவர்கள்  வேதம்  ஓதும்  பிராமணர்கள் கூட ஆகலாம்  என்று சொல்கிறது.
  
சைவ சமயத்தில் சூத்திரரும் பூணூல் அணியலாம் என்றே சிவாகமங்கள் கூறுகின்றன.சிவாகம கருத்துக்களை தமிழுக்கு மொழிபெயர்த்தருளிய ஸ்ரீமத் நிகமஞான சம்பந்த தேசிகர் என்றும் ஸ்ரீமத் மறைஞானசம்பந்த தேசிகரென்றும் அழைக்கப்படும் சைவ சித்தாந்த ஆச்சாரியானவர்,தமது நூலான "சைவ சமய நெறி"-ல் இவ்வாறு கூறியுள்ளார் :

தர்ப்பணத்தி லர்ச்சனையி லாகுதியி லுந்தரிக்க
விற்பயிலுஞ் சூத்திரரிந் நூல் 
(சைவ சமய நெறி  : ஆச்சாரியரிலக்கணம் : 52

இல்லத்தில் ஒழுகின்ற சூத்திரர்,தர்ப்பண காலத்திலும் பூசாகாலத்திலும் அக்கினி காரிய காலத்திலும் இப்பூணூலைத் தரிக்கக் கடவர்

உம்மையால் தீக்ஷா காலமும் உற்சவகால முதலியனவுங் கொள்க.

இவரு ணயிட்டிகனெப் போதுந் தரிக்க
வவனியிலு மாசையறுத் தால் 
(சைவ சமய நெறி  : ஆச்சாரியரிலக்கணம் : 53  


இச்சூத்திரருள் நயிட்டிகப் பிரம்மச்சாரியானவன் மண்ணாசை பொன்னாசை பெண்னாசை என்கின்ற மூவகை ஆசைகளையும் நீக்கியிருப்பானாகில் எக்காலத்தும் பூணூல் தரிக்கக் கடவன் 

ஆக, சூத்திரரும் பூணூல் அணியும் மரபு சைவத்தில் உண்டு என்று தெளிவாகியுள்ளது.

 எனவே  ஸ்வபாவத்தால்  ஏற்படுகின்ற  தொழில்  ஒன்றானாலும்சிந்தையால்  ஒருவன்  எப்படி வாழ்கிறான்  என்பதன்  மூலமே  ஒருவன்  உயர்ந்தவன்  எனப்படுவதும்தாழ்ந்தவன்  என்ப்படுவதும்  ஆகும் . ஜாதி  வேறுபாடுகளையும் , அவற்றின்  அடிப்படையில்  உயர்வுதாழ்வுகளையும்  வேதபுராணங்களில்்  சொல்லவில்லை.

No comments:

Post a Comment