Friday 12 January 2018

பொங்கல் தமிழர்களுக்கான பண்டிகை 
மட்டுமல்ல, எல்லா இந்துக்களின் பண்டிகை !

இந்தியாவிலுள்ள எல்லா இந்துக்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையே. பொங்கல் / மஹரசங்கராந்தி / சூரிய நாராயண விழா / இந்திர விழா ஆகிய பெயர்களில் எல்லா இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாளை உலகத்திற்கே ஒளி கொடுக்கின்ற சூரியக் கடவுளாகிய சூரியபகவானைப் (சூரிய நாராயணரை) போற்றி வணங்கி வழிபடும் திருநாளாக பொங்கலை கொண்டாடுகின்றனர்

சங்க இலக்கியங்களில் மிகவும் தொன்மையான நூலான  தொல்காப்பியத்தில், மருதநிலக் கடவுள்  இந்திரன் என்கிறார்…..

"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"  
-         தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05

இதில் கூறும் வேத கால தெய்வங்களான   விஷ்ணு (மாயோன்), இந்திரன் (வேந்தன்), வருணன், ஸ்கந்தன் சேயோன் (சிவப்பு நிறமானவன்)/  ஆகியோரே தமிழர்களின்  தெய்வங்கள் என்கிறார்.

சங்க காலம் நிலப்பரப்பை குறிஞ்சி (மலை மற்றும் மலை சார்ந்த), முல்லை ,மருதம் , நெய்தல் மற்றும் பாலை எனப் பிரிகிறது இங்கேஇதில் தொல்காப்பியம் இந்நிலப்பரப்பிற்கு அதிபதியான கடவுளர்களாகக் குறிப்பவை: முல்லை –  மாயோன் - திருமால் (விஷ்ணு), குறிஞ்சிமுருகன், (கார்த்திகேயன்), மருதம்இந்திரன் , நெய்தல்வருணன், பாலைகொற்றவை (சக்தி) என தான் மேலே சொல்கிறார் !

இதில் மருதநில அதிபதியாக இந்திரனை சொல்கிறார்.. இந்த மருதநிலம்  வேளாண்மையும் வேளாண்மை சார்ந்த இடமுமாகும். விவசாயத்திற்கு தேவை மழை. அந்த மழையை கொடுப்பது மேகம். அந்த மேகங்களை இயக்கும் கடவுள் இந்திரன்! ஆகவே காலமாற்றத்தில் இந்திரவிழா பொங்கல் விழாவாக உருமாற்றம் அடைந்துள்ளது !

இந்திர_விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை காதையில் இந்திர_விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த விழா,காவிரி பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்று பொருள். பகலவன்/பரிதி தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன்/பரிதி சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறதுஎனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.

பொங்கல் வந்த கதை :

இந்திர விழா என்ற பெயரில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் இந்திரனை ஆயர்கள் வழிபட்டு வந்தனர். ஆயர்கள் பக்தியோடும் பயத்தோடும் இந்திரனை வழிபட்டனர். ஆகவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி ஆயர்களுக்கும் அவர்தம் ஆநிரைகளுக்கும் வளங்கள் தரும் கோவர்த்தன மலைக்கு ஆயர்கள் மரியாதை செய்தனர் . இதனால் கோபமுற்ற இந்திரன் புயலாலும், மழையாலும் ஆயர்களை துன்புறுத்தினான். கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் ஸ்ரீ கிருஷ்ணர் காத்தருளினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் காத்த நாளே சூரிய நாராயண பூஜையாகும்.

இந்திரன் தன் தவறை உணர்ந்து கண்ணனிடம் தன்னையும் மக்கள் வழிபட வேண்டும் என்று வேண்டிக்கொண்டதால் தை 1-ம் நாள் முன்தினம் இந்திர வழிபாடை(போகி பண்டிகை) ஆயர்கள் கொண்டாடினர். தை 1-ம் நாள் சூரியபகவானை சூரியநாராயணராக பாவித்து வழிபட்டனர். அதன் மறுநாள் தங்களின் ஆநிரைகளுக்கு விழா (மாட்டுப்பொங்கல்) எடுத்து தங்களின் உணவுகளை அவைகளுக்கு படைத்தும், காளைகளுடன் விளையாடியும் (ஜல்லிக்கட்டு,மஞ்சு விரட்டு) விழாவை கொண்டாடினர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது

இந்திரவிழா இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடப்பட்ட சிறப்பினையும், அதுவே பழங்கால மரபாக இருந்தமையையும் உணரலாம். மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை காதையில் இந்திர விழாவினை நடத்த வேண்டும் என்பதற்காக அரசவையில் கூடியவர்கள் என கூறுவது...

சமயக் கணக்கரும்;தந்துறை போகிய
அமயக் கணக்கரும்; அகலாராகிக்
கரந்துரு எய்திய கடவுளாளரும் (13-16)

 இம்மை, மறுமைப் பயன்களை உணர்ந்தவரும் நால்வகை உறுதிப் பொருள்களின் உண்மை அறிந்த வரும் ஆன சமயக் கணக்கர், காலம் கணிக்கும் சோதிடர், தம் தேவ உருவினை மறைத்து மனித உருவம் கொண்ட கடவுளர்கள் (தேவர்கள்), பன்மொழி பேசும் வேற்று நாட்டினர், ஐம்பெருங் குழுவினர், எண் பேராயத்தினர் ஆகியோர் ஒன்று கூடி விழா நடத்த முடிவு செய்தனர்"

மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும்
ஆயிரங் கண்ணோன் விழாக்கால் கொள்க
அடிகள் 25-26)
ஆயிரங்கண்ணோன் = இந்திரன்)

"புகார் நகரத்திற்கு ஏற்படும் துன்பத்தினைத் தடுக்கவும், நகரம் வளமடையவும், இந்திர விழாவை வழக்கம்போல் கொண்டாட வேண்டும் என்னும் செய்தி வெளிப்படுகின்றது. "

திருவிழை மூதூர் வாழ்கஎன் றேத்தி
வானமும் மாரி பொழிக! மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக. (32-34)

இந்திர விழா நடைபெற இருப்பதனைப் புகார் நகர மக்களுக்குப் பின்வரும் செய்திகளைக் கூறி அறிவித்தான். முதலில் திருமகள் விரும்பி உறைகின்ற மூதூரான இப்புகார் நகரம் வாழ்க என்று வாழ்த்தினான். பின் மாதந்தோறும் மூன்று முறை தவறாது மழை பொழிவதாகுக என்றான். ஞாயிறு, திங்கள் முதலிய கோள்கள் தம் நிலையில் மாறுபடா வண்ணம் மன்னவன் செங்கோலனாக ஆகுக என்று அரசனை வாழ்த்தி முரசறைந்து தெரிவித்தான்.

மன்னன் கரிகால் வளவன் நீங்கிய நாள்
இந்நகர் போல்வதோர் இயல்பினது ஆகிப்
பொன்னகர் வறிதாப் போதுவர் என்பது
தொன்னிலை உணர்ந்தோர் துணிபொருள் (35-42)

(பொன்னகர் = அமராபதி; வறிதாக = வெற்றிடமாக; தொன்னிலை = பழமையான வரலாறு)
இப்பகுதியில் இந்திர விழா நடக்கும் நாளில் தேவர்கள் எல்லாரும் வந்து புகாரில் தங்குவதால், அமராபதியே வெற்றிடம் ஆகிவிடும் என்று கூறுவதால் விழாவின் மேன்மை புலப்படுகின்றது.

விழவுமலி மூதூர் வீதியும், மன்றமும்
பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்;
நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின் (5457)

(நு தல் விழி = நெற்றிக்கண்; சதுக்கத்துத் தெய்வம் = சதுக்கப் பூதம்)

“மக்கள், வீதிகள், பொது இடங்கள், கோயில்கள் முதலான இடங்களில் அழகுபடுத்திய விதம் பற்றிய செய்தியினை அறிந்து கொள்ள முடிகிறது. இப்பகுதி இந்திரனுக்கு விழா எடுக்கும் நாட்களில், அந்நகரத்து உறைகின்ற எல்லாத் தெய்வங்களுக்கும் விழா நிகழ்த்தப்படும் வழக்கம் மரபாய் இருந்தமையை உணர்த்துகின்றது.”

தமிழ் இலக்கியங்களில் இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது மணிமேகலை. இக்காப்பியத்தின் முதல் காதையாகிய விழாவறை காதை என்னும் இப்பகுதியில் பூம்புகார் நகரில் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் இந்திர விழாவின் சிறப்புப் பேசப்படுகிறது

போகி பண்டிகை :

போகி பண்டிகை இந்திரனுக்காக ஆயர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.போகி என்ற சொல் இந்திரனை குறிக்கும். போகத்தை (விளைச்சலை) தந்தவன் போகி. பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.ஆயர்கள் இந்திரவிழாவை முடித்து சூரியவழிபாடை தொடர்ந்தனர்.

மாட்டுப் பொங்கல் :

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு.

ஜல்லிக்கட்டு - ஶ்ரீமத்பாகவதத்திலுள்ள தசமஸ்கந்தத்தில் ,58வது சர்கத்தில்,34வது ஸ்லோகத்தில், கண்ணன் ஏழு எருதுகளை அடக்கியதை "வ்ருஷ ஜில்லாப்யாம்" என்று கூறப்பட்டுள்ளது. "வ்ருஷபம் என்றால் காளை , ஜில்லாப்யாம் - வெற்றிபெற்று பெரும் பரிசு, ஆக "வ்ருஷ ஜில்லா க்ரீடா " - ஏரு தழுவும் விளையாட்டு என்பது மருவி "ஜல்லிக்கட்டு "ஆனது.

முதல் ஜல்லிக்கட்டு வீரன் கிருஷ்ணனே!

ஜல்லிக்கட்டு பற்றிக் குறிப்பிடும் முதல் தமிழ்ச்சங்கப் பாடலே கிருஷ்ணனைக் குறிப்பிடும் மர்மம் என்ன?

மாயோன் முல்லை நிலத் தெய்வம் ஆவான். ஏறுதழுவுதல் முல்லை நில பண்பாடு. கிருஷ்ணன் ஏறுதழுவியே நப்பின்னை என்ற பெண்ணை மணந்தார் என்ற செய்தியை நம்மாழ்வார் தம் பெரியதிருவந்தாதியில் குறிப்பிடுகிறார்... அதே போல பாகவதத்தில் கிருஷ்ணர் ஏழு காளைகளை அடக்கிய செய்தியை 'வ்ருஷப ஜில்லாப்யாம்' என்று குறிப்பிடப்படுகிறது.

சங்கத்தமிழரிடத்தே புராண மரபுக்கதைகள் வழங்கப்பட்டுவந்தனவா?

கலித்தொகை -103 வது பாடலில் வரும் வரிகள்

மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை
வாய் பகுத்து இட்டுப் புடைத்த ஞான்று, இன்னன் கொல்
மாயோன் என்று உட்கிற்று, என் நெஞ்சு!

இந்த பாடல் ஏறுதழுவும் வீரனை வர்ணிக்கின்றது. தோழியானவள் தலைவியிடம் இளம் காளையினை தழுவுகின்ற உன் நாயகனைப் பார். அன்றொரு நாள் கம்சனால் ஏவப்பட்ட 'கேசி' எனும் குதிரை வடிவில் வந்த அசுரனை வாய் பிழந்து கொன்றழித்த கண்ணன் கூட இவ்வாறு தான் வீரத்தை வெளிப்படுத்தினானோ? என்று தலைவனது வீரத்தையும், அழகையும் திருமாலோடு ஒப்பிடுகிறாள்.

இதன்மூலம் நாம் அறிவது யாதெனின் புராணங்கள் ஆரிய பிராமணர்களால் பிற்காலத்தில் புகுத்தப்பட்ட புரட்டுகளல்ல.. கிருஷ்ணனைப் பற்றிய புராணங்கள் தமிழ்மண்ணில் காலம்காலமாக வழங்கி வந்தவையே! சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் இராமன், கிருஷ்ணன் முதலியோரைப் புகழும் பாடல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் தமிழரது ஏறுதழுவும் கலாசாரத்தின் பழமையைப் பறைசாற்றி நிற்கின்றது.

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்:

தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை

தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை

“”
தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு

தைஇத் திங்கள் தண்கயம் போல

எனவேஇந்தியாவிலுள்ள எல்லா இந்துக்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையேபொங்கல் / மஹரசங்கராந்தி / சூரிய நாராயண விழா / இந்திர விழா ஆகிய பெயர்களில் எல்லா இடங்களிலும் கொண்டாடப்படுகிறது.


No comments:

Post a Comment