Friday 29 December 2017

ஏகாதசி பற்றி வேதங்கள் கூறுவது என்ன ?





ஏகாதசி விரதம் பற்றி வேத இலக்கியங்களில் ஒரு ஸ்லோகத்தின் மூலம் விளக்குகிறது !

 ஏகாதச்யாம் து காத்வ்யம் ஸர்வேஷாம் போஜந த்வயம் |
கத்தோபவாஸ : ப்ரதம : ஸக்கதா ச்ரவணம் தத : ||
  
இதில் முதல் வரியை பார்க்கலாம்...

ஏகாதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் போஜன த்வயம் |

பொருள்: "ஹே ஜனங்களே! ஏகாதசியில் எல்லாராலும் இரண்டு விஷயங்களை கடைபிடிக்கவேண்டும்"

ஏகாதசியில் எல்லா ஜனங்களும் செய்யவேண்டிய அந்த இரண்டு விஷயங்கள் என்ன?

அதைச் ஸ்லோகத்தின் அடுத்த வரியில்  சொல்கிறது:..

கத்தோபவாஸ : ப்ரதம : ஸக்கதா ச்ரவணம் தத :

பொருள்: "சகல ஜனங்களும் ஏகாதசியன்று சுத்த உபவாஸமிருக்க வேண்டும்; பகவானின் மஹிமைகளைக் கேட்க வேண்டும்"

 அதாவது இதில் கூறுகிற முதல் விஷயம்  உபவாஸம் இருப்பது,. இரண்டாவது விஷயம் பகவானின் கதைகளைக் கேட்பது"

ஏகாதச்யாம் து காத்வ்யம் ஸர்வேஷாம் போஜந த்வயம் |
கத்தோபவாஸ : ப்ரதம : ஸக்கதா ச்ரவணம் தத : ||

பொருள்:" ஹே ஜனங்களே! ஏகாதசியில் எல்லாராலும் இரண்டு விஷயங்களை கடைபிடிக்கவேண்டும். அதாவது ஏகாதசியன்று சுத்த உபவாஸமிருக்க வேண்டும்; பகவானின் மஹிமைகளைக் கேட்க வேண்டும்"
  
உபவாஸம் எதற்காக?
  
'உபவாஸம்' என்றால் 'கூட வசிப்பது' என்பதே ! அதாவது, பகவனோடு கூட, அவனுக்குப் பக்கத்தில்  வசிப்பது தான் உபவாஸம்.

சுத்த உபவாஸம் என்றால் எதையுமே சாப்பிடாமல் (தண்ணீர்கூட குடிக்காமல்) இருப்பதே ஆகும்.. இதற்காகத்தான் உடம்பை லேசாக  ஆக்கிக்கொண்டு அதனால் சுவாசத்தை  ஃப்ரீயாகவும் மனசை லேசாகவும் பண்ணிக் கொண்டு நன்றாக இறைவனின் மேல்  தியானத்தில் ஈடுபடும் பொருட்டு எப்போதுமே உணவை எளிமையாக  வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், ஒரு பக்ஷத்துக்கு (அம்மாவாசை முதல் பௌணமி வரை அல்லது பௌணமி முதல் அம்மாவாசை வரை)  ஒருநாள் சுத்தோபவாஸம் (முழுவிரதம்) கடைபிடிக்கவேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது .
  
இந்த உடம்புதான் 'நான்' என்று நினைத்துக் கொண்டிருப்பதால்தான் நாம் எப்போதுமே பராமரிப்பதிலேயே இருந்துகொண்டு,   ஆத்மாவைக் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த உடல் சம்பந்தமான  புத்தி போகவேண்டும்.. இதற்காகத்தான் உடலுக்கு சிரமத்தை தருகிற உபவாஸங்களை சாஸ்திரம் விதித்திருக்கிறது. உபவாஸங்களால் உடலுக்கு  ஏற்படுகிற சிரமங்களைச் சிரமமாகத் தெரியாமல் பழக்கிக் கொள்கிறோமென்றால், அப்போது தேகத்தை  பிரதானமாக மதித்து அதன் பராமரிப்பதை   விடுகிறோம் என்றுதானே அர்த்தம்?

'பசி எடுத்தாலும் சாப்பிடாமல் உபவாசம் இருப்பதும், தேவை இல்லாத பேச்சுக்களை பேசுவதையும் தவிர்த்து பகவானின் நினைவிலேயே அன்று முழுவதும் இரவில் கூட தூங்காமல் இறைவனது நினைவில் இருந்து நமது உடலை பழகுவதால் தான் நான் உடல் என்கிற எண்ணம்  போகும். உடல்  எப்படியானாலும் மனது பகவானிடம் நிற்கும். இப்போது பிடித்தே பழக்கிக் கொள்ளாவிட்டால் மரண வலி  என்று சொல்லுகிறார்களே, அந்தப் பெரிய கஷ்டம் உடலுக்கு  வரும்போது மனசை எப்படிப் பகவானிடம் செலுத்த முடியும் ? . அதனால் தான் சாஸ்திரங்கள் இப்படி விரதங்களை கடைபிடிக்க சொல்கிறது.

வாழ்வதற்கு உணவு அவசியம்தான். இல்லாவிட்டால் உயிர் போய்விடும். ஆனால் உணவு  கொஞ்சம் அதிகமாகி  விட்டால்கூட உடம்புக்கு வியாதி வந்துவிடுகிறது. வியாதி நாம் உண்ணும் உணவேl. எனவே,  ஆரோக்கியத்துக்குக் காரணமான சாப்பாடு அளவு  தாண்டிவிட்டால் நோய்க்குக் காரணமாகிவிடும்.

மெஷின்கள்கூட விடாமல் வேலை செய்தால் கெட்டுப் போய் விடுகின்றன என்று அவ்வப்போது ஓய்வு கொடுக்கிறார்கள். இப்படி வயிற்றுக்கும் ஓய்வு கொடுத்தால் ஆரோக்யத்துக்கு ரொம்ப நல்லது.

உடம்பு என்று முழுசாக ஒன்றை எடுத்துக் கொண்டால் அதற்கு ஆறு நாள் வேலை கொடுத்தால் ஒருநாள் லீவ் தருவது என்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த உடம்புக்கு உள்ளே வயிறு முதலான உறுப்புக்கள் தனியாக வேலை பண்ணிக்கொண்டேயிருக்கின்றன! இவற்றில் இதயத்தை கொஞ்சங்கூட ஒய்வு  கொடுத்து வைக்க முடியாது. வயிற்றுக்குக் கொடுக்க முடியும்; கொடுக்கவும் வேண்டும்.

ஏனென்றால் உடல்  வெளியிலிருந்து உணவுகளை வாங்கிக் கொண்டு அரைத்துக் கரைத்து ரொம்பவும் உழைப்பது அதுதான். எப்போது பார்த்தாலும் வேலை செய்யும் கருவி அதுதான். எப்போது பார்த்தாலும் வேலை செய்யும் கருவி கெட்டு விடுவதுபோல் ஒரு வேளை மாற்றி இன்னொரு வேளை என்று ஓயாமல் வேலை பண்ணினால் ஜீர்ணக் கருவிகள் கெட்டுவிடும். எனவே, உணவு  ரத்தமாகி, பம்ப் ஆகும் போது மூளைக்குப் பாய்கிறது. அந்த மூளை ரொம்ப நுட்பமான பகுதி. அதனால், அதற்கு இந்த ரத்த ஓட்ட 'வெய்ட்'டை அவ்வப்போது குறைக்க வேண்டும். இதற்கெல்லாம் உபவாஸம் உறுதுணை செய்கிறது.
  
ஆகவே உபவாஸமிருந்தால் ஆரோக்யம் போய்விடும் என்று தோன்றினாலும் உண்மையில் இதுதான் இருக்கிற நோய்களை  போக்கும் பெரிய மருந்து ஆகும்.

'லங்கனம் பரம ஒளஷதம் என்றே வைத்ய' என்கிற வேத  சாஸ்த்ர வசனம் சொல்கிறது.

லங்கனம் என்றால் பட்டினி என்று ஏன் அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம் தெரியுமா? அந்த வார்த்தைக்கு நேர் அர்த்தம் "தாண்டுவது" என்பதாகும். ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் அதைத் தாண்டிப் போய்விட்டால், உணவை துறப்பது என்று சொல்கிறது இதுதான், அதுவே லங்கனம்.

வைத்ய சாஸ்த்ரம் சொல்கிற கருத்தையே  வேத நூல்களும் சொல்கின்றன திருவள்ளுவரும் இதைச் சொல்லியிருக்கிறார். அவ்வப்போது ஒரு வேளை, இரண்டு வேளை சாப்பிடாமலிருந்தால்தான் வயிற்றிலே ஏற்கனவே போட்டதில் துளிக்கூட ஜீரணமாகாமலில்லை என்று நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். இப்படி ஏற்கனவே சாப்பிட்டது முழுதும் ஜெரித்துப்போனதை ('அற்றதை') த் தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகே ஒருவன் மறுபடி உண்பானானால் அப்படிப்பட்டவனுடைய உடம்புக்கு மருந்து எதுவும் வேண்டாம் என்று திருவள்ளுவர் சொல்கிறார்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
  
சாப்பாட்டினால்தான் ஆரோக்யம் என்று நாம் நினைத்தாலும் வியாதிக்கும் அதுதான் முதல் தோழன் ஆகும்.  ஜ்வரம் வந்தால் டாக்டர் முதலில் என்ன பண்ணச் சொல்கிறார்?

'சாப்பாட்டை நிறுத்து;கஞ்சி குடி; இல்லாவிட்டால் இதையெல்லாம்  சாப்பிடு' என்று தானே சொல்கிறார்?

எந்த நோயானாலும் அதற்குப் பத்தியமாக என்னென்ன சாப்பிடக் கூடாது என்றுதான் முக்யமாகக் கண்டிப்புப் பண்ணுவதிலிருந்தே வியாதிக்கு ஆதாரம் உணவு தான் என தெரிகிறது. இப்படி உடல்  ரீதியில் ஆரோக்யத்துக்கு நன்மை செய்கிற பட்டினியே அதைவிட ஆத்ம ஸம்பந்தமாக நல்லது செய்கிறது.

உணவுகளில் பல வகைகள் உடம்புக்குப் சக்தி தந்தாலும் மனஸைக் கெடுப்பவையாயிருக்கின்றன. ஸத்வ உணவை  சாப்பிட்டு வந்தாலுங்கூட உடம்புக்குள்ளே கெட்டியான சாப்பாடு ஒன்று போய் விழுந்தால் அது மனசை லேசாக்கி மேலே கிளம்ப விடாமல் கனமாகக் கீழே இழுத்துக்கொண்டுதானிருக்கும். இதனால்தான் நடு நடுவே சுத்தப் பட்டினி கிடைக்க சொல்கிறது பட்டினி கிடக்கிறபோது மனசுக்குப் பரமார்த்திகமாகவும், பகவத் விஷயமாகவும் போய்த் தோய்ந்து நிற்கிற தன்மை உண்டாகிறது. இதனால்தான் பகவான் சம்பந்தமான விசேஷமாக இருக்கவேண்டிய தினங்களில் பூர்ண உபவாஸமோ இருக்க வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது.

இப்படியாக உடல் நலத்தோடு உயிர் நலத்தையும் இம்மையோடு மறுமையையும் சேர்த்து முன்னோர்கள்  உபவாஸ விதிகளைத் தந்திருக்கிறார்கள். முதலில் கஷ்டமாயிருந்தாலும் பயிற்சியினால் சமாளித்து விடலாம். பக்தி பலத்தோடு, சங்கல்ப பலத்தோடு ஆரம்பித்தால் அதிலே தெரிகிற நல்ல பலனைப் பார்த்தே நாளுக்கு நாள் உபவாஸ நியமத்தில் ஈடுபாடு வலுக்கும்.

ஆரம்பத்தில் உடம்பை வாட்டுவது சிரமமாயிருந்தாலும் பிற்பாடு ஏற்படுகிற பெரிய இன்பத்துக்காக இதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
  
வ்ரதோபவாஸ நியமை : க்லேசித : ஸுகம் அச்நுதே |
இக்ஷு க்லேசாத் யதா (ஆ) நந்தம் ததா ப்ராப்நோதி தத் ஸுகம் ||
  
'கரும்பைக் புழிந்து எடுப்பதால் தான்  கருப்பஞ்சாற்றை எடுத்துப் பானம் பண்ணுகிற இன்பம் கிடைப்பது போல, உடம்பைக் கிலேசப்படுத்துவதால்தான் உள்ளத்துக்கு ஸுக ரஸம் கிடைக்கிறது.'

வியாபாரி முதலில் கையிலிருப்பதைச் செலவழித்துத்தான் பொருள்களை  வாங்குகிறான். அப்புறம் அதை விற்று அதிகப் பணம்  சம்பாதிக்கிறான். அதுபோலவே,  உடம்பை முதலில் செலவழித்து, அப்புறம் அந்தச் செலவுக்கு மேல் பெரிய வரவு ஆத்மாவுக்கு சம்பாதித்துக் கொள்வதற்கே உபவாஸமிருப்பது.ஆகும்.

சாப்பிடுகிற நாட்களிலும் பகவானை நினைத்து கொள்ளுங்கள், ; உபவாஸ நாளில் சாப்பிடாமலிருந்தும் த்யானம் பண்ணிப் பாருங்கள். தனக்கே வித்தியாசங்கள் தெரியும். அந்த லாபத்துக்காக இந்த நஷ்டப் படலாம் என்று தெரிந்து கொள்வீர்கள். எனவே வாயால் சொல்வதை விட, நீங்களே உபவாசம் இருந்தால் , இந்த உபவாஸத்தின் அவசியமும் பெருமையும் விளங்கிவிடும்.

எனவே, நாம் ஏகாதசி ஆகிய விரத நாள்களில் விரதமிருந்து,பகவானின் சிந்தனையில் இருக்கும் பொது நமது உடல் ஆரோக்கியமும், ஆன்மீக பயனும் அடைவீர்கள். 


No comments:

Post a Comment