Monday 19 November 2018


சனாதனதர்ம ஆன்மீகத்தை கடைபிடிக்கும் மக்களின்  
உடை  என்ன ? 
ஆண்களுக்கு – பஞ்சகச்சம் & பெண்களுக்கு - மடிசார் / சேலையும் ?



 பொதுவாக, நமது சனாதன தர்மத்தில் உள்ள ஆன்மிக மக்கள் ஆண்கள் பஞ்சகச்சமும், பெண்கள் மடிசாரும் அல்லது சேலையும்  அறிகிறார்கள். அதனை பற்றிய சிறிய தகவல்களை இங்கே தந்துள்ளேன்...

பஞ்சகச்சம் & மடிசார்/சேலை  போன்றவைகள் விசேஷ உடைகள் அல்ல. அவை நாம் தினமும் அணிய வேண்டியவை தாம். என்ன செய்ய, காலத்தின் கோலம், எவையெல்லாம் சர்வ சாதாரணமாக இருந்ததோ, அவையெல்லாம் இன்று முக்கிய விசேஷங்களில் சம்பந்தப்பட்டவைகளாகி விட்டன.

விசேஷ தினங்களிலாவது இவற்றை அணிந்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் கர்மாக்கள் நஷ்டமாகும்.மேலும் இவற்றை அணிவதொன்றும் பெரிய கஷ்டமும் அல்ல.

தினமும் இந்த உடைகளை அணிய முயற்சி செய்தால் சுலபமாகப் பழக்கமாகி விடும்.............. மற்றொன்றையும் இந்த சமயத்தில் எடுத்துக்கூற விரும்புகிறேன். இன்று சுடிதார், பேண்ட் போன்றவைகள் பழக்கத்திற்கு வந்துவிட்டன. சமுதாயமும் இதை ஏற்றுக் கொண்டு விட்டது. அவை இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் குறைந்தது கோவில்களுக்கும், ஆன்மீக நிகழ்ச்சிகள்  நடக்கும் இடங்களுக்கும், ஆன்மீக பெரியோர்கள் போன்ற மஹான்களை தரிசிக்கச் செல்லும் பொழுதாவது, இவற்றைத் தவிர்த்து, புடவை வேஷ்டியில் செல்வது நல்லது.

முதலில், ஆண்கள் அணியும் பஞ்சகச்சம் உடையை குறித்த ஸ்லோகங்கள் ...

குக்ஷித்வயே ததா ப்ருஷ்டே நாபௌ த்வௌ பரிகீர்த்திதௌ
பஞ்சகச்சா:ஸ்து தே ப்ரோக்தா: சர்வ கர்மஸு ஷோபனா:

குக்ஷி என்றால் இடுப்பு,
குக்ஷித்வயே = இரண்டிடுப்பில் ( வலது இடுப்பில் ஒன்று இடது இடுப்பில் ஒன்று )
ததா = அவ்வாறு
ப்ருஷ்டே =பின்புறத்தில் ஒன்று
நாபௌ = தொப்புளில் இரண்டு
கச்சம் என்றால் சொருகுதல்
பஞ்சகச்சா: = ஐந்து சொருகலானது
சர்வ கர்மஸு = எல்லா காரியங்களிலும்
ஷோபனா: = மன்களகரமானதாக
ப்ரோக்தா: = கூறப்படுகிறது

அதாவது வலது இடுப்பில் ஒரு சொருகல், இடது இடுப்பில் ஒன்று, பின்புறத்தில் ஒன்று, தொப்புள் பகுதியில் இரண்டு என்று ஐந்து சொருகுதல் முறையையே பஞ்சகச்சம் என்று பெரியோர்களால் கூறப்படுகிறது..

 பெண்கள் அணியும் மடிசார் / புடவை உடை ..

.           தமிழ்நாட்டு பிராமணர்கள் திருமணமானப் பெண்கள் புடவை அணியும் பாணி மடிசார் எனப்படும்...பழைய பழக்கங்களின்படி திருமணமானதும் பிராமணப் பெண்கள் தினமும் இந்தப் பாணியில்தான் புடவை அணியவேண்டும். அல்லது சுடிதார்,பாண்டு ஆகியவைகளை தவிர்த்து  புடவையாவது பெண்கள் அணிந்துகொள்ளவேண்டும்.  சமையலும் குளித்துவிட்டு மடியாக, சுத்தமாக இந்தப்பாணி புடவைக் கட்டிக்கொண்டுதான் செய்யவேண்டும்...மடியை சார்ந்த பாணி என்பதால் மடிசார் கட்டு என்பர்...இந்த பாணியில் இருவகை உண்டு...வைணவ மதத்தினர் (ஐயங்கார்) புடவையின் மேல் தலைப்பை இடது பக்கமாகவும், சைவ மதத்தினர் (ஐயர்) வலது பக்கமாகவும் மடித்து அணிவர்...மடிசார் கட்டுவதற்குப் புடவையின் நீளம் அதிகமாகத் தேவைப்படுமென்பதால் ஒன்பது கெஜம் நீளமுள்ளப் புடவையே கன கச்சிதமான மடிசார் கட்டுக்குப் பயன்படுகிறது...

பெரும்பாலும், தற்காலத்தில் பெண்கள் தினமும் மடிசார் /புடவை  கட்டுவதில்லை...விசேட காலங்களில்தான் கட்டுகின்றனர்...சம்பிரதாயமானது அல்ல என்றாலும் சற்று எளிதான முறையில் ஆறு கெஜம் நீள புடவையிலும் மடிசார் கட்டும் முறை தற்போது நடைமுறையிலுள்ளது...முறையான மடிசார் பாணியில் கட்டியப் புடவை எந்தச் சூழ்நிலையிலும் பெண்களின் உடலிலிருந்து நழுவாது,வழுவாது, அவிழாது, பறக்காது என்பதே சிறப்பாகும்...

பொதுவாக, இந்த உடைகள் அணிவது என்பது நாம் கோவிலுக்கு சென்று அமரும் போது நமது கால் பாதம் தெரியாமல் இருக்கவேண்டும், ஏனெனில் அங்கே பகவான் இருப்பதால். அதனாலேயே இந்த பாரம்பரிய  உடைகளை அணிகிறார்கள். வேறு உடைகளான  பாண்டு ஆகியவைகளை ஆண்கள் அணியும் போது நமது கால்கள் மறையாது. அதுபோல பெண்கள் சுடிதார் அணியும் போதும் அவர்களது பாதம் மறைக்க முடியாது.

எனவே தான் இந்த பாரம்பரிய உடைகளை நாம் அணிகிறோம். மேலும், இப்படி பாரம்பரிய உடைகள் அணிவதன் மூலம் நமது உணர்வு தானாகவே இறைவன் மேலே வருவதற்கு ஒரு தயார் படுத்துகிறது. இந்த உடையை பிறர் பார்க்கும் போதும் அதே உணர்வு நிலை கிடைக்கிறது. அதாவது, ஆன்மீக பற்றிய ஒரு விழிப்பு பிறருக்கு கிடைக்கிறது.

எனவே, ஆன்மீக பாதையில் முன்னேற விரும்புவார்கள் ஆண்கள் பஞ்சசக்கமும், பெண்கள் புடவை / மடிசார் ஆகியவை அணிந்து தங்களது ஆன்மீகத்தில் முன்னேறவேண்டுகிறோம்.

No comments:

Post a Comment